Social Sharing
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வளமான ஆட்சி அமைய பாடுபடுவோம் சமாஜ்வாடி கட்சியின் தமிழ் மாநில ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வளமான ஆட்சி அமைய பாடுபடுவோம் என சமாஜ்வாடி கட்சியின் தமிழ் மாநில ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று திருச்சியில் சமாஜ்வாடி கட்சி முதன்மை செயலாளரும், செய்தி தொடர்பாளருமான தமிமுன் அன்சாரி நிஜாமி தெரிவித்தார்.
திருச்சியில் சமாஜ்வாடி கட்சியின் தமிழ் மாநில ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. எதிர்கால தேர்தல் நிலைப்பாடு குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சமாஜ்வாடி கட்சி முதன்மை செயலாளரும், செய்தி தொடர்பாளருமான தமிமுன் அன்சாரி நிஜாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது : இந்தியாவின் பன்முகத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். மத நல்லிணக்கம் தழைத்தோங்க வேண்டும். மதச்சார்பின்மை பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கங்களின் அடிப்படையில் மதசார்பற்ற அணியை ஆதரிப்பது, அதாவது திராவிட முன்னேற்ற கழகத்தை ஆதரித்து தேர்தல் பணியாற்ற இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொகுதி உடன்பாடு மேற்கொள்வது, அந்த அணியோடு உடலும் உயிருமாக, ஆன்மாவாக இருந்து 234 தொகுதிகளிலும் தேர்தல் களப் பணி ஆற்றுவது என்றும், வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை கேட்டு பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. திமுக கூட்டணியில் இணைய முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வளமான தமிழகம் அமைய வேண்டும்.
பன்முகத்தன்மை, மதசார்பின்மை அரசு அமைய வேண்டும் என்கிற லட்சியத்தை நிலைநாட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கும், இதற்கு ஆதரவாக இருக்கும் அதிமுக.வுக்கும் மிகப்பெரிய தோல்வியை தமிழக மக்கள் வழங்க வேண்டும். இந்திய மதச்சார்பின்மை தேசம் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு அரசு தமிழகத்தில் அமைய வேண்டும். அதற்காக நாங்கள் பாடுபடுவோம். வரும் 21ம் தேதி மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ளது. மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுக்கோட்டை சரவணமுத்து, விவசாய பிரிவு பாலசுப்ரமணியன், பொதுச் செயலாளர் முத்துராமலிங்கம், வேலூர் நித்யானந்தா, அறந்தாங்கி ம முத்துக்கருப்பன், வர்த்தக அணி மாநில தலைவர் ராமநாதபுரம் பாலகிருஷ்ணன், வேலூர் ஜஹாங்கீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஷாஹுல் ஹமீது.