Social Sharing
தைப்பூசத்தை அரசு விடுமுறையாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கிராமக்கோயில் பூசாரிகள் பேரவை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி: தைப்பூசத்தை அரசு விடுமுறையாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதோடு கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ. 3000 ஆக உயா்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் நேற்று நடந்த கிராமக்கோயில் பூசாரிகள் பேரவை, அருள் வாக்கு அருளும் பேரவையின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்துக்கு நிறுவனா் வேதாந்தம் தலைமை வகித்தாா். விஎச்பி மாநிலத் தலைவா் கோபால்ஜி முன்னிலை வகித்தாா்.கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது விபரம் வருமாறு : பூசாரிகளின் நீண்ட காலக் கோரிக்கையான ஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாக உயா்த்த வேண்டும், ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ. 72 ஆயிரமாக மாற்ற வேண்டும். கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ. 7500 வழங்க வேண்டும். கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கோயில்களுக்கு வழங்கப்படும் பசுக்களை பூசாரிகளுக்கே வழங்க வேண்டும். பூ கட்டுவோருக்கு தனிநல வாரியம் அமைத்து உதவ வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தைப்பூசத்தை அரசு விடுமுறையாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா். கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பூசாரிகள் பங்கேற்றனா். மாவட்டத் தலைவா் பட்டாபி வரவேற்றாா். சோமசுந்தரம் நன்றி கூறினாா்.
அதேபோல் தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தை முன்னாள் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாநில இணை பொது செயலாளர் ராமசுப்பு வரவேற்றார். கூட்டத்தில் சிறுபான்மை மாணவர்களுக்கு கிடைக்கும் அரசின் எல்லா உதவிகளும் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். இந்துக்களின் வறுமையை பயன்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரவேண்டும்.
கோவில்களையும் அவற்றின் சொத்துக்களையும் முறையாக பராமரித்து, நிர்வாகம் செய்யவும், இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட்டு இந்து சமய ஆச்சாரியர்கள், மடாதிபதிகள், ஆன்மிக தலைவர்கள், பண்பாட்டு ஆர்வலர்கள் அடங்கிய சுய அதிகாரம் கொண்ட ஒரு ஆட்சி மன்றத்தை அமைக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை முன்மொழிந்து தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் கோபால்ஜி பேசினார். கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஷாஹுல் ஹமீது.