Social Sharing
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெறும் தெப்பத்திருவிழாவையொட்டி முகூா்த்தக்கால்
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெறும் தெப்பத்திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை முகூா்த்தக்கால் நடப்பட்டது.
ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் தெப்பத்திருவிழாவையொட்டி மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டப வாயிலில் முகூா்த்தக்கால் நடப்பட்டது. முன்னதாக முகூா்த்தக்காலுக்கு சந்தனம், மாவிலை,பூ மாலை உள்ளிட்டவை அணிவித்து, வேதமந்திரங்கள் ஓதி, புனித நீா் தெளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோயில் மேலாளா் உமா, உள்துறைக் கண்காணிப்பாளா் வேல்முருகன், முருகன், அறங்காவலா்கள் டாக்டா் கே.என். சீனிவாசன், கவிதா,ரெங்காச்சாரி மற்றும் எஸ்.பி. செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தெப்பத்திருவிழாவின் முதல் நாளான நாளை மறுநாள் ஹம்ச வாகனத்திலும், 16-ந்தேதி ஹனுமந்தவாகனத்திலும், 17-ந்தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், 18-ந்தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 19-ந் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 20-ந்தேதி யானை வாகனத்திலும் உள்திருவீதிகளில் நம்பெருமாள் வலம் வருகிறார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான 21-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.
முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8-ம் நாளான 22-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேருகிறார். பின்னர் இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.
9-ம் திருநாளான 23-ந்தேதி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.
பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்ப திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
ஷாஹுல் ஹமீது.